அல்லாஹ்விற்கு சரியான எண்ணிக்கை தெரியவில்லையா?
கேள்வி
assalamu alaikkum ,
37:147 என்ற வசனத்தில் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான என்ற சொல் வருகிறது. அப்படி என்றால் அல்லாஹ்வுக்கு சரியான எண்ணிக்கை தெரியவில்லையா ? இது மனிதன் எண்ணுவது போல் உள்ளதே? என்ற கேள்விக்கு விளக்கம் கொடுங்கள்.
PJ அவர்களின் பதில்
யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும் போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான மக்களுக்கு அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான்.
மனிதன் இப்படிச் சொல்லலாம். எத்தனை பேர் என்பதில் அல்லாஹ்வுக்குச் சந்தேகம் வரலாமா என்று குர்ஆனில் குறைகாண்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். ஒரு தூதரை அனுப்புதல் என்பது ஒரு நொடியில் முடிந்து போகும் விஷயம் அல்ல. அவரது பணி பல ஆண்டுகள் நீடிக்கும். எந்த நாளில் அவர்தூதராக அனுப்பப்பட்டாரோ அன்று இருந்த மக்கள் தொகை அடுத்த நாளில் அதிமாகி விடும். இப்படி இருபத்திஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமான மக்கள் அதிகமாகி இருப்பார்கள். எனவே அவர் எத்தனை மக்களுக்கு அனுப்பப்பட்டார் என்றுதிட்டவட்டமாகச் சொல்லி இருந்தால் அது தான் தவறாகும்.
யூனுஸ் நபி அனுப்பப்பட்ட நேரத்தில் ஒரு லட்சம் பேர் இருந்தால் அவர் அம்மக்களுக்குப் பிரச்சாரம் செய்த காலத்தில் நாள்தோறும் மக்கள் தொகை அதிகமாகி இருக்கும். அவ்வாறு அதிகமாகும் மக்களுக்கும் அவர் தான் தூதராவார்.
ஏழு கோடி மக்களுக்கு அதிபராக ஒருவர் தேர்வு செய்யப்பட்டார் என்றால் அவர் பதவியின் இறுதிக் காலத்தில் ஏழரைக் கோடி மக்களுக்கு அதிபராகி இருப்பார்.
இப்படிச் சிந்திக்கும் போது இந்தச் சொற்றொடர் எவ்வளவு அற்புதமான சொற்றொடர் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒரு லட்சம் பேருக்கு நபியாக அனுப்பினோம் என்று குர்ஆன் கூறி இருந்தால் யூனுஸ் நபி காலத்தில் வாழ்ந்த யாரும் பிள்ளை பெறவில்லையா எனக் கேட்டு அல்லாஹ்வின் கூற்றைப் பொய்யாக்கி இருப்பார்கள்.
எனவே தான் வித்தியாசமான சொற்றொடரைப் பயன்படுத்தி இதைச் சொன்னது அல்லாஹ் தான் என்பதை இவ்வசனம் உறுதி செய்கிறது. மேலும் ஒருலட்சம் அல்லது அதற்கு குறைவாக அல்லது கூடுதலாக என்று கூறாமல் அல்லது கூடுதலாகஎன்று மட்டும் சொல்லி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இது இறைவனின் வார்த்தை தான் என்பதற்கான ஆதாரமாக இவ்வனம்அமைந்துள்ளது.